News

கிளிநொச்சியில் இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும்; சிறிதரன் எம்.பி கோரிக்கை

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஒரு இராணுவ நினனைவுச் சின்னம் உள்ளது. டிப்போவிற்கு பின்னால் இரண்டு ஏக்கர் காணி இராணுவத்தின் வசமுள்ளது.

தற்போது பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனால் மிகப்பெரிய கலாச்சார மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது.

அதனை இராணுவம் தான் இடித்து அழித்தது.

கிளிநொச்சி டிப்போவிற்கு பின்னால் உள்ள காணியின் இரண்டு ஏக்கர் நிலத்தை மாவட்ட செயலகத்தின் ஊடாக பெற்று, இராணுவ சின்னம் அகற்றப்பட்டு அதில் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் பெயரில் ஒரு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த நகரப் பகுதிக்குள் இவ்வாறு காணிகள் இராணுவத்திற்கு தேவையில்லை என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், காணி உரிமை கோருபவர்களது மத்தியில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றது. கிராம சேவகர்கள் உண்மையான காணி உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button