ட்ரம்பின் அறிவிப்பை எதிர்த்தது சவூதி அரேபியா – சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்கும் வரை இஸ்ரேலுடன் எவ்வித உறவும் இல்லை எனவும் அறிவித்தது

சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்கிய பிறகே இஸ்ரேலுடன் தூதரக ரீதியிலான உறவை மேற்கொள்வோம் என்று சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கிடையே வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் (04) நேரில் சந்தித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப்,
காஸாவை கைப்பற்றி அமெரிக்க இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். அத்தோடு காஸா முனையில் உள்ள பலஸ்தீனியர்கள் எகிப்து மற்றும் ஜோர்தான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவர் என்றும் தெரிவித்தார்.
ட்ரம்பின் அறிவிப்பை எதிர்த்து, சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“பலஸ்தீனத்தில் சுதந்திரமான அரசை ஏற்படுத்துவதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது, அதனை யாரும் மாற்ற முடியாது என்பதை வெளியுறவு அமைச்சரகம் உறுதிப்படுத்துகிறது.
கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு சுதந்திர பலஸ்தீன நாட்டை உருவாக்க சவூதி அரேபியா தனது இடைவிடாத முயற்சிகளை தொடரும். இதனை ஏற்படுத்தாமல் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை சவூதி அரேபியா ஏற்படுத்தாது.
இஸ்ரேலிய குடியேற்றக் கொள்கைகள் மூலம் நில இணைப்பு அல்லது பலஸ்தீன மக்களை அவர்களின் நாட்டுக்குள் இடம்பெயரச் செய்வதை சவூதி அரேபியா நிராகரிப்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


