அயல்வீட்டார் – ஏழை எளியவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, நாமும் பெருநாள் கொண்டாடுவோம்.

கலாபூஷணம் பரீட் இக்பால்
அல்லாஹ்வின் அருளையும் பாவ விமோசனத்தையும் அடைய தூண்டிக்கொண்டிருந்த ரமழான் எனும் விஷேட மகத்துவமான மாதத்தை வழியனுப்பி வைத்து கவலையில் ஆழ்ந்த இறை விசுவாசிகளுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இறைவன் வழங்கிய மாண்பு மிக்க தினமே புனித நோன்புப் பெருநாள் தினமாகும்.
புனித ரமழான் பூராகவும் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவெல்லாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்த முஸ்லிம்கள் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டவுடன் ஈதுல் பித்ர் எனும் ஈகைத் திருநாளை குதூகலமாக கொண்டாடுகின்றனர்.
ரமழானில் நன்மைகளைக் கொள்ளையிட்ட உள்ளங்கள் ஷவ்வால் மாத தலைப் பிறையுடன் ரமழானுக்கு விடை கொடுத்து விட்டு நோன்புப் பெருநாள் குதூகலத்தில் திளைக்கின்றன.
பெருநாள் தினம் என்பது சிறியோர், பெரியோர், ஏழை, பணக்காரன், முதியவர் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி மகிழ்ச்சியுடன் கழிக்கக் கூடிய தினமாகும். இப்பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதை ஹராமாக்கியுள்ள இஸ்லாம் அல்லாஹ்வின் உவப்புக்குரிய வழிகளில் பெருநாளைக் கொண்டாட வழிகாட்டியுள்ளது.
பெருநாள் தினம் அல்லாஹ்வை ஞாபகமூட்டக் கூடிய, அவனைப் புகழக் கூடிய தினமாக இருக்க வேண்டுமே தவிர நற்செயல்களுக்கு மூட்டை கட்டும் தினமாக அமையலாகாது.
ஈதுல் பித்ர் பெருநாளில் அதிகமானளவு நன்மைகளை செய்ய நாம் முன்வர வேண்டும். நாம் மட்டும் பெருநாளைக் கொண்டாட அயல் வீட்டார் பெருநாளைக் கொண்டாட வசதியற்றவனாக இருப்பானேயானால் நாம் கொண்டாடும் பெருநாளில் என்ன தாற்பரியம் உண்டு என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
நோன்புப் பெருநாளுக்கு ஒவ்வொரு முஸ்லிமும் தயாராகும் போது பித்ரா (தர்மம்) கொடுப்பதைக் கொண்டே தயாராக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நோன்புப் பெருநாள் தர்மம் நோன்பின் போது ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் ஏழை, எளியவர்கள் பெருநாள் தினத்தில் பசி, பட்டினியோடு இருக்கக் கூடாது என்ற நோக்கங்களின் அடிப்படையிலும் கடமையாக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் பெருநாள் தினம் தனித்துவமானதாகவும் முன்மாதிரியானதாகவும் அமைய வேண்டுமென்று இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.
முஸ்லிம்கள் இந்த நாட்டில் தனியாக வாழ்பவர்கள் அல்லர். நாம் பெரும்பான்மை சமூகங்களுடன் இரண்டறக் கலந்தே வாழ்கிறோம். எனவே அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர்கள் ஆவேசப்படுகின்ற, ஆத்திரப்படுகின்ற சூழ்நிலைகளை நாம் உருவாக்கக் கூடாது.
ஒருவருக்கு இருக்கும் உரிமைகளும் மத, கலாசார கொள்கைச் சுதந்திரங்களும் இன்னுமொருவருக்கு இடைஞ்சலாக இருக்க முடியாது என்பது ஜனநாயக தத்துவங்களில் ஒன்றாகும்.
இஸ்லாம் இம்மை, மறுமை பயன்களை அடைந்துகொள்ளக் கூடிய வகையில் பெருநாளைக் கொண்டாட வழிகாட்டியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தில் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது ஒரு வழியால் சென்று மற்றுமொரு வழியால் திரும்பி வருவார்கள். இதன் மூலம் பலரை சந்திக்கவும் ஏழைகளுக்கு உதவி புரியவும் கூடிய வாய்ப்பைப் பெற்றார்கள்.
பெருநாள் தினத்தில் வீண் கேளிக்கை, விளையாட்டுக்களை தவிர்த்து சகோதர மதத்தவர்களுடன் புரிந்துணர்வு கருதிய ஒன்றுகூடல்களை நடாத்தலாம். இதன் மூலம் இரு சாரார் மத்தியில் நிலவும் தப்பபிப்பிராயங்கள் நீங்கி பிரதேச மற்றும் தேசிய அமைதிக்கு வழியேற்படும்.
வறிய மக்களின் துயர் துடைக்கும் பித்ரா என்ற கடமையுடன் பெருநாள் தொடங்குவதன் காரணமாகவே பித்ர் என்ற வார்த்தையுடன் சேர்ந்து ஈதுல் பித்ர் என்று இப்பெருநாள் அழைக்கப்படுகின்றது. பெருநாள் தினத்தில் இரவு, பகல் இரண்டு வேளைகளுக்கு தனக்கும் தனது பராமரிப்பிலுள்ள குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்கும் போதுமான அத்தியாவசிய வாழ்க்கை வசதிகளையுடைய ஒவ்வொரு முஸ்லிமும் இத்தகைய வசதிகள் அற்ற அல்லது வசதிகள் குறைந்த ஏழைகளுக்கு கட்டாயமாகக் கொடுப்பதற்குரிய நன்கொடையே ஸகாதுல் பித்ர் எனப்படும்.
பெருநாள் தினத்தன்று சகல முஸ்லிம்களும் சந்தோஷமாக உண்டு மகிழ வேண்டும், எவரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற சமுதாய நோக்கு முதலாவதாகவும், பித்ராவை வழங்கும் ஒவ்வொருவரும் ரமழான் மாதத்தில் விட்ட பிழைகளுக்குப் பரிகாரமாகவும் ஸகாதுல் பித்ர் இருப்பதனால் நோன்பாளிகள் பரிசுத்தவான்களாக மாறுவதனால் தனியார்கள் நன்மை பெறுவது இரண்டாவது நோக்கமாகவும் திகழ்கின்றது.
ஒவ்வொரு முஸ்லிமின் செயல்கள் மற்ற சகோதர முஸ்லிம்களின் சுகதுக்கங்களில் பங்குபற்றக் கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும். இந்த உண்மையை ஸகாதுல் பித்ர் அமைப்பு முறையிலும் காணக்கூடியதாக உள்ளது.
பெருநாள் தினத்தில் நாங்கள் எல்லோரும் அதிகாலையில் குளித்து, புத்தாடைகள் அணிந்து, நறுமணம் பூசி, அறுசுவை உணவுகளை உண்டு மகிழ்கின்றோம் அல்லவா? இதே போன்று அன்றைய தினத்தில் நாம் பின்பற்றி நடக்க வேண்டிய நபி வழியில் வந்த செயற்பாடுகளும் உண்டு. ஒரு ஊரில் அல்லது மஹல்லாவில் வாழும் முஸ்லிம்கள் தனித்தனியாக அல்லது குழுக்களாக பிரியாமல் சகலரும் ஒன்று சேர்ந்து ஒரு திறந்த வெளியில் அல்லது மைதானத்தில் இது முடியாத போது ஒரு பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை நடத்த வேண்டும்.
ஈதுல் பித்ர் தொழுகை முடிந்தவுடன் இமாம் நிகழ்த்தும் குத்பா உரையை அனைவரும் கேட்க வேண்டும். தொழுகையை போன்றே குத்பாவும் ஒரு இபாதத் என்பதை மறக்கலாகாது. இவ்வாறு ஒரு இமாமுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன் மூலம் முஸ்லிம் சமுதாய அமைப்பு வலுப்பெறுவதோடு தனிப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமும் பலவகையான நன்மைகளையும் அல்லாஹ்வின் அருளையும் பெறும் வாய்ப்பைப் பெறுகின்றனர். பெருநாள் தொழுகை முடிந்ததும் தான் சந்திக்கும் சகோதர்களுக்கு “தகப்பலல்லாஹு மின்னி வமின்க” உங்களுடையதும் என்னுடையதும் நற்செயல்களையும் வாழ்த்துக்களையும் அல்லாஹ் அங்கீகரிப்பானாக! என்று கூறி வாழ்த்து தெரிவிப்பது சுன்னத்தாகும்.
பெருநாள் தினங்களில் உறவினர்கள், நண்பர்கள், மார்க்க ஊழியர்கள் அனைவரையும் கண்டு பேசி உபசரித்து, வாழ்த்துக் கூறி தங்களிடையே பற்றையும் பாசத்தையும் அன்பையும் ஆதரவையும் மென்மேலும் அதிகரித்துக் கொள்வதும் சிறந்த செயலாகும்.
இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களாகிய நாம் எமது பெருநாளின் சிறப்புக்களை மாற்று மத இனங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எந்தத் தவறுமில்லை. அவ்வாறு நாம் முன்மாதிரியாக நடந்து கொள்ளும் போதுதான் இந்த நாட்டில் இன நல்லுறவைக் கட்டியெழுப்ப முடியும். இப்பெருநாள் தினங்களில் பிற மதத்தவர்களுடன் குரோதம், விரோதம் ஏற்படாத வகையில் புரிந்துணர்வையும் சக வாழ்வையும் பெருநாள் காலங்களில் கட்டியெழுப்பும் முன்மாதிரியான நிகழ்ச்சிகளை அந்தந்த ஊர்களின் கழகங்கள், ஸ்தாபனங்கள், அமைப்புக்கள் ஏற்பாடு செய்வது வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும். இவ் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் பெருநாளாக அமைய அல்லாஹ்வை வேண்டுகிறோம்.
மேலும் இலங்கையில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் பெரும்பான்மையினருடனும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுடனும் பிரச்சினைகளிலிருந்து நீங்கி சமாதானமும் சகவாழ்வும் இனங்களுக்கிடையே சகிப்புத் தன்மையும் புரிந்துணர்வும் ஏற்படவும் அல்லாஹ் அருள் புரிவானாக. இலங்கையில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் ஏனைய சமூகங்களுடன் பிரச்சினையின்றி வாழவும் இந்நன்னாளில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். பித்ரா கொடுப்போம், பெருநாள் கொண்டாடுவோம்.
கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்



