காதல் விவாகரத்தில் 19 வயது இளைஞனை தூணில் கட்டிவைத்து தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது.

அகுரஸ்ஸ, மலிடுவ பகுதியில் 19 வயது இளைஞர் ஒருவரையும் அவரது தாயாரையும் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அகுரஸ்ஸ காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட இளைஞர் கடத்தப்பட்டு, அவர்களது வீட்டருகே உள்ள கான்கிரீட் தூணில் கட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட இளைஞரும், 24 வயது சந்தேக நபரும் அஹங்கம பகுதியில் ஒரே பணியிடத்தில் பணியாற்றியவர்கள் எனவும், காதல் தொடர்பான நீண்டகால பகைமை காரணமாக இந்தக் கடத்தல் மற்றும் தாக்குதல் நடந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி வீடு திரும்பிக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட இளைஞரை, 24 வயது சந்தேக நபர், அவரது பெற்றோர், மற்றும் இரு உடன்பிறப்புகள் கடத்தி, கான்கிரீட் தூணில் கட்டி தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரை மீட்க வந்த அவரது தாயாரும் தாக்கப்பட்டுள்ளார்.
பகுதி மக்களின் கோரிக்கைகளையும் மீறி, சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவரை விடுவிக்க மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, அகுரஸ்ஸ காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவரை மீட்டு, அவரையும் காயமடைந்த அவரது தாயாரையும் அகுரஸ்ஸா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர், காவல்துறையினர் 24 வயது சந்தேக நபர், அவரது 53 வயது தந்தை, 49 வயது தாய், 28 வயது சகோதரி, மற்றும் 22 வயது சகோதரர் ஆகியோரை கடத்தல் மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டில் கைது செய்தனர்.



