இலங்கையைச் சேர்ந்த 10,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

தாய்லாந்தில் உள்நாட்டு தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், இலங்கையைச் சேர்ந்த 10,000 தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கம்போடிய தொழிலாளர்கள் எல்லை மோதலொன்றைத் தொடர்ந்து தமது நாட்டிற்குத் திரும்பியதால், தாய்லாந்தில் இந்த தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும், தாய்லாந்தில் முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தபட்சம் 30 இலட்சம் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, இலங்கை, நேபாளம், வங்காளதேசம், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து ஏற்கனவே 30,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். முதல் கட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.



