எறாவூர்பற்று கிராம சேவகர் நியமன சர்ச்சை; வழக்கை முன் கொண்டு செல்ல மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி!

நீண்டகாலமாக நிலவிவருகின்ற ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மீராகேணி, மிச் நகர், அய்யங்கேணி கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மனுதாரரினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் (Application) நிருவாக சர்ச்சையை காரணம் காட்டி “தகைமையீனம்” (Disqualified) செய்யப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதி மன்றத்துக்கு தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று நீதியரசர்கள் S.U.B.கரலியத்த, கலாநிதி D.F.H. குணவர்த்தன் ஆகிய குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேற்படி நிர்வாக குழப்பங்கள் அரச அதிகாரிகளினால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் அதனை காரணம் காட்டி எறாவூர் மீராகேணி யை சேர்ந்த மனுதாரரை “தகைமையீனம்” செய்தது சட்டத் தவறு என மனுதாரர் சார்பில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் வாதங்களை முன்வைத்தார்.
இதன்போது மனுவினை முன்கொண்டு செல்ல அரச தரப்பு சட்டத்தரணியினால் முதனிலை ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலனை செய்த நீதியரசர்கள் அரச தரப்பு வாதங்களை புறமொதுக்கி மேற்படி வழக்கில் விடயப்பொருளுள்ளது எனும் அடிப்படையில் வழக்கினை முன் கொண்டு செல்ல அனுமதி வழங்கியது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் தலைமையில் சட்டத்தரணிகள் றஷாட் அஹமட், நப்ரத் நஜ்முடீன், மேவின் தயாளன் மற்றும் சிபான் முத்தலிப் ஆகியோர் தோன்றி சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.



