ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பை கோருவதற்கு அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா? நாமல் கேள்வி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்போது அரசாங்கம் வாக்களிப்பை கோரவில்லை என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நாமல் ராஜபக்ச,
அரசாங்கம் தீர்மானத்தை வாய்மொழியாக எதிர்த்ததாகவும் ஆனால் வாக்கெடுப்பை நடத்த கோரவில்லை. இந்தநிலையில், குறித்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை கோருவதற்கு அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால், அதன்போது இலங்கையை ஆதரிக்க பெரும்பாலான நாடுகள் தயாராகவே இருந்ததாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
அரசாங்கம் தனது இரட்டை நிலைப்பாட்டை நிறுத்தி நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய நாமல் ராஜபக்ச, அரசாங்கம், தமிழ் புலம்பெயர்ந்தோரை மகிழ்விக்கப்போகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.



