News

கடந்த கால ஆட்சியாளர்கள் தொன் கணக்கில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்து விநியோகித்ததனால் நாடு பாரிய சீரழிவை எதிர்கொண்டுள்ளது ;  ஆதம்பாவா MP

கடந்த கால ஆட்சியாளர்கள் தொன் கணக்கில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்து விநியோகித்ததனால் நாடு பாரிய சீரழிவை எதிர்கொண்டுள்ளது – அபூபக்கர் ஆதம்பாவா

நூருல் ஹுதா உமர்

கடந்த கால ஆட்சியாளர்கள் தொன் கணக்கில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்து விநியோகித்ததன் காரணமாக நாடு பாரிய சமூக மற்றும் பொருளாதார சீரழிவை எதிர்கொண்டுள்ளதாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலும், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் நெறிப்படுத்தலிலும் அம்பாறை மாவட்டத்திற்கான விசேட போதை ஒழிப்பு பேரணி இன்று (23) கல்முனையில் நடைபெற்றது.

“போதைப்பொருளுக்கு எதிராய் – எம் தேசத்திற்காய்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பேரணி, சாய்ந்தமருது எல்லைக்கு முன்பாக காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அபூபக்கர் ஆதம்பாவா, இளைஞர் சமூகத்தை இலக்காகக் கொண்டு திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் வலையமைப்புகள் செயல்பட்டதாகவும், அதனை கட்டுப்படுத்துவதில் கடந்த ஆட்சியாளர்கள் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டையும் எதிர்கால தலைமுறையையும் பாதுகாக்கும் நோக்கில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மையப்படுத்தி விழிப்புணர்வு நடவடிக்கைகள், சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மற்றும் சமூக ஒத்துழைப்புடன் கூடிய தேசிய மட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இப்பேரணியில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜீ.பீ.எம். றஸாட், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பிரதிப்பணிப்பாளர், இளைஞர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாதைகள் மற்றும் கோஷங்களை ஏந்தியவாறு கல்முனை நகர் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர், கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் பேரணி நிறைவடைந்தது.

போதைப்பொருள் பாவனையால் சமூகத்திற்கும் இளைஞர் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைப்பதோடு, போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும். இந்நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர் அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button