குவைத் நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘முபாரக் அல்-கபீர்’ விருது இந்திய பிரதமர் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

குவைத்தில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்பினார்.
இந்தப் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று கூறிய பிரதமர் மோதி, இரு நாடுகளும் தற்போது முக்கிய கூட்டாளிகளாக மாறிவிட்டதாக கூறினார்.
நரேந்திர மோதியின் பயணம் வரலாற்று சிறப்பு மிக்கது என்று சொல்வதற்கு முக்கிய காரணம், இந்திய பிரதமர் ஒருவர் குவைத்திற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வது 43 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. இதற்கு முன், 1981-இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி குவைத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
குவைத்தின் மொத்த மக்கள்தொகை சுமார் 43 லட்சம். அதில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர். குவைத்தில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 30 சதவிகிதம் பேர் இந்தியர்கள். இந்திய பிரதமர் மோதியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது
இந்திய பிரதமர் மோதியின் வருகை குறித்து குவைத் டைம்ஸ் நாளிதழில் ‘குவைத் தேசியக் குழுவின் செயல்திட்டம் 2030’ இன் தலைவர் டாக்டர் காலித் ஏ. மெஹ்தி கட்டுரை எழுதியுள்ளார்.
அந்தக் கட்டுரையில், டாக்டர் மெஹ்தி, “2023-2024ல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 10.479 பில்லியன் டாலராக இருந்தது. குவைத்துக்கு இந்தியாவின் ஏற்றுமதி 2.1 பில்லியன் டாலராக இருந்தது, அது ஆண்டுதோறும் 34.78 சதவிகிதம் அதிகரித்தது. 2022 ஆம் ஆண்டில், குவைத்திலிருந்து 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்

