சித்திரைப் புதுவருடத்தில் மீண்டும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படலாம் – சாணக்கியன் எம்.பி!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ் – சிங்கள புத்தாண்டின் போது நாட்டில் மற்றுமொரு அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.
அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட தரவுகளில் பிழைகள். காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அந்த தரவுகளுக்கு அமையவே அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அங்காடிகளில் கூட சிவப்பு அரிசி காணப்படவில்லை.ஆகவே, இந்த விடயத்தை வேடிக்கையாக எடுத்துக்கொண்டு அரிசி தட்டுப்பாடு இல்லையென்று கூறாதீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் உரிய முறையில் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள். இல்லையெனில், எதிர்காலத்தில் பாரியளவிலான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் எந்தவொரு வகையிலும் அரசியல் தலையீடுகளுக்கு இடமில்லை என அதன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த விடயங்கள் குறித்து விளக்கமளிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.



