கல்விச் சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து வீரவங்ச அணியினரின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு !

தரம் 6 க்காக அறிமுகப்படுத்தப்படவிருந்த புதிய கல்வி விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்ததைத் தொடர்ந்து, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வந்த தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளாக, குறித்த கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக இரத்துச் செய்தல் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பன அமைந்திருந்தன.
ஆளும் தரப்பினரால் இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் தமது போராட்டத்தை இவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளனர்.
போராட்டம் நிறைவடைந்த தருணத்தில், அங்கிருந்த குழுவினர் வெற்றிக் கோஷங்களை எழுப்பியதுடன், பட்டாசுகளைக் கொளுத்தித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


