நாடு தழுவிய ரீதியில் மின்சாரத் தடை: சுமார் 15,000 மின்தடை சம்பவங்கள் பதிவு

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் சுமார் 15,000 மின் தடை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் ஏற்பட்ட இந்த மின்சாரத் தடையினால், முக்கிய நகரங்கள் பல இருளில் மூழ்கின.
குறிப்பாக கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம், அனுராதபுரம் ஆகிய பகுதிகள் பாதிப்பை எதிர்கொண்டிருந்தன.
உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் உள்ள மக்கள் மின்சார விநியோகத் தடையினால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளே இந்த திடீர் மின்சாரத் தடையிற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.
ஐந்து தசாப்த கால வரலாற்றைக் கொண்ட இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டு, 6 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டதை எதிர்த்து மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், கடந்த 8ஆம் திகதி நள்ளிரவுடன் இலங்கை மின்சார சபை என்ற கட்டமைப்பு முடிவுக்கு வந்தது. கடந்த 9 ஆம் திகதி முதல் மின்சார சபை 6 வெவ்வேறு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.



