உலகளாவிய போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்தால் அமெரிக்க டொலரின் பெறுமதி 350 ரூபாயைத் தாண்டக்கூடும்..

இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மை பலத்த ஆபத்தில் இருப்பதாகவும், நிலவும் உலகளாவிய போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்தால் அமெரிக்க டொலரின் பெறுமதி 350 ரூபாயைத் தாண்டக்கூடும் என்றும் பேராசிரியர் பிரசன்ன பெரேரா எச்சரிக்கிறார்.
நாட்டின் பொருளாதாரம் தற்போது நிலையற்ற மட்டத்தில் இருப்பதை ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வாராந்த வேலை நாட்களைக் குறைக்கும் நடவடிக்கை மற்றும் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் ‘QR’ கோட்டா முறையை அறிமுகப்படுத்த எடுத்துள்ள தீர்மானங்கள் பேராசிரியரின் விமர்சனத்திற்கு உள்ளாகின.
இந்த நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள் பல நடைமுறைச் சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், இதன் மூலம் சமூகத்தில் கடும் அதிருப்தி நிலவி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கமும் மத்திய வங்கியும் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 7 பில்லியன் டொலர்கள் என அறிவித்த போதிலும், உண்மையில் பயன்படுத்தக்கூடிய மட்டத்தில் இருப்பது 5.5 பில்லியன் டொலர்கள் மாத்திரமே என்பது இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்காக எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார இலக்குகளை அடைவதில் இருந்து இலங்கை படிப்படியாக விலகிச் செல்வதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



