உலக சந்தை விலையை விட 45 டொலர்கள் அதிக விலை கொடுத்தே அரசாங்கம் தற்போது டீசலை கொள்வனவு செய்கிறது

“உலக சந்தை விலையை விட 45 டொலர்கள் அதிக விலை கொடுத்தே அரசாங்கம் தற்போது டீசலை கொள்வனவு செய்கிறது. நட்பு நாடுகளுடன் கலந்துரையாடி குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என முன்னர் கூறப்பட்டது. ஆனால் அவ்வாறு செய்வதற்கு எவ்வித முயற்சியும் எடுக்காமல், மக்களுக்கு ஒன்றைச் சொல்லிவிட்டு இன்னொன்றைச் செய்யும் இந்த அரசாங்கம், எம்மீது சேறு பூசுவதால் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை.
ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடியதாகக் கூறினார்கள். ஆனால், தற்போது அவர்கள் 20 மில்லியன் ரூபா வீதம் கணக்குக் காட்டிச் சென்றால், 18 பில்லியன் டொலர்களைச் சேர்க்க இந்த 5 வருடங்கள் அல்ல, அடுத்த ஜென்மத்திலும் முடியாது என்பது தெளிவாகிறது.
அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க நிலக்கரி ஊழல், கேப் கொடுக்கல் வாங்கல் மற்றும் சீனி மோசடி போன்றவற்றின் மூலம் தேசிய பொருளாதாரத்தைச் சீரழித்துள்ளது. உப்பு முதல் அனைத்தையும் இறக்குமதி செய்யும் நிலைக்கு நாட்டைத் தள்ளியுள்ளனர். தாங்கள் முன்பு கூறிய பொய்களை நீதிமன்றம் அல்லது சுயாதீன நிறுவனங்கள் மூலம் நிரூபிக்க இப்போதும் முயற்சிக்கின்றனர். இதற்காக அதிகாரிகளை அச்சுறுத்தி வாக்குமூலங்களைப் பெறுகின்றனர். இது நல்லாட்சி அரசாங்கத்தின் அனுபவமாகும், ஏனெனில் அந்த ஊழல் எதிர்ப்பு குழுக்களில் இருந்தவர்களே இப்போதும் இந்த அரசாங்கத்தில் உள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் தீர்மானிக்க வேண்டும், அவர் பெலவத்தையிலுள்ள ‘மாலிமாவ’வின் பொலிஸ் மா அதிபராகச் செயற்படுகிறாரா அல்லது இலங்கையின் பொலிஸ் மா அதிபராக நேர்மையாகச் செயற்படுகிறாரா என்று. சுயாதீன நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை இதனால் சீர்குலைந்து வருகிறது. ஒரு அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் பதிவாகியுள்ளது. பொய் சாட்சியங்களை உருவாக்குவதற்காக அவர் மீது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் இந்த அரசாங்கம் டயஸ்போராவின் (புலம்பெயர் அமைப்புகள்) தேவைகளை நிறைவேற்றுகிறது. சுரேஷ் சாலே விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் அதற்கமையவே நடக்கின்றன. இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ இந்த அரசாங்கத்தின் பொலிஸிடமிருந்தோ அல்லது நீதிமன்றத்திடமிருந்தோ நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாம் எதற்கும் தயாராகவே இருக்கிறோம்.
எரிபொருள் விவகாரத்தில் அரசாங்கம் தயாராக இருந்ததா இல்லையா என்பதற்கு மக்கள் தகுந்த நேரத்தில் பதிலளிப்பார்கள். உலக நாடுகள் தயாராகிக் கொண்டிருந்த போது, இது குறித்து பாராளுமன்றத்தில் நாம் எச்சரித்தோம். ஆனால் அரசாங்கம் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டது. இப்போதும் குறைந்த தரத்திலான நிலக்கரியைக் கொண்டு வந்து நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். அந்த நஷ்டத்தை ஈடுகட்ட மின்சாரக் கட்டணத்தையும் எரிபொருள் விலையையும் அதிகரித்து மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர்.
ராஜபக்ஷக்களை விட நாட்டுக்கு அதிக பிரச்சினைகள் உள்ளன என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். கொழும்பு துறைமுக நகரம் (Port City) மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றின் மூலம் இந்த நேரத்தில் அதிகபட்ச நன்மைகளைப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். துபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு இதுவே சிறந்த தருணம்.
இது எமக்கு புதிய விடயமல்ல. நல்லாட்சி அரசாங்கமும் ஜே.வி.பி அரசாங்கமும் ஒன்றுதான். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போது மஹிந்த ராஜபக்ஷ கூறியது போல, இந்தத் தீர்மானங்களினால் அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் சவால்கள் வரும் என்பது எமக்குத் தெரியும். எனவே நாம் இதற்காக வருத்தப்படவோ அல்லது பின்வாங்கவோ மாட்டோம்.”



