எரிபொருள் விலை 5000 ரூபாவாக அதிகரித்தாலும்,நாம் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவு !

எரிபொருள் விலை 5000 ரூபாவாக அதிகரித்தாலும், தேசிய மக்கள் சக்திக்கு (மாலிமாவ) வழங்கும் ஆதரவை எக்காரணம் கொண்டும் மீளப்பெறப்போவதில்லை என ராஜாங்கணே சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார். கடந்த கால ஊழல் அரசியல் வெறுத்துப் போனதாலேயே தாம் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாகவும், தனிப்பட்ட நோக்கங்களுக்காக அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது சமூக ஊடகக் கணக்கில் காணொளி ஒன்றைப் பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“எரிபொருள் விலை 5000 ரூபாவிற்குச் சென்றாலும் நாம் மாலிமாவிற்கே ஆதரவு வழங்குவோம். ஊழல் நிறைந்த அரசியல் வெறுத்துப் போய்தான் மாலிமாவிற்கு வந்தோம். மீண்டும் திரும்புவதற்காக வரவில்லை, முழு மனதுடன் உதவுவதற்காகவே வந்தோம்” என அவர் கூறியுள்ளார்.
தாம் அரசியல் செய்வது ஜனாதிபதி அல்லது அமைச்சர்களுடன் “செல்பி” எடுப்பதற்கோ அல்லது தனிப்பட்ட வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கோ அல்ல என்றும், அரசாங்கத்திடமிருந்து ஒரு கிளாஸ் பச்சைத் தண்ணீரைக் கூட தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கினாலும், அரசாங்கம் நாட்டைச் சரியாகக் கட்டியெழுப்பத் தவறினால் அவர்களையும் விமர்சிப்பேன் என சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊழல் கும்பல்கள் மீண்டும் இந்த நாட்டை நரகமாக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.



