News

நாங்கள் திருட மாட்டோம்.. திருடர்களைப் பிடிக்கவே வந்துள்ளோம்.. ஒரு ரூபாயேனும் திருடியதை நிரூபித்தால் அமைச்சர் பதவியைத் துறப்பேன்… – ஜெயகொடி

எரிசக்தி அமைச்சரின் நாடாளுமன்ற உரை

தானும் தனது அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தது நாட்டில் நிலவிய ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரம் மற்றும் பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை ஒழிப்பதற்கேயன்றி, திருடுவதற்காக அல்ல என்றும், தனது அரசாங்கத்தின் கீழ் ஒரு ரூபாயேனும் ஊழல் நடந்துள்ளதாக நிரூபித்தால் தான் அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயார் என்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிலக்கரி கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், கடந்த காலத்தில் அமைச்சரவை ஊடாக ஊழல் மோசடியான முறையில் அனுமதி பெற்று முன்னெடுக்கப்பட்ட அனைத்து நிலக்கரி கடத்தல்களையும் நிறுத்துவதற்கு தான் நடவடிக்கை எடுத்துள்ளதாக வலியுறுத்தினார். குறிப்பாக, ‘ஸ்பொட் டெண்டர்’ (Spot Tender) ஊடாக இடம்பெற்ற மோசடியான நடைமுறைகளை தான் தலையிட்டு நிறுத்தியுள்ளதாகவும், வருங்கால டெண்டர் நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த கால ஆட்சிக் காலங்களில் எவ்வித பிணையும் (Bond) இன்றி, யோஷித ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர்கள் குழுவொன்று துபாயில் நிறுவிய நிறுவனம் ஊடாக ஊழல் நிறைந்த முறையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இங்கு வெளிப்படுத்தினார்.

கடந்த கால முறைகேடுகள் குறித்த வெளிப்படுத்தல்:

• கடந்த ஆண்டில் 11 கப்பல்கள் தாமதமாக வந்த போதிலும், அதற்காக எந்தவொரு தாமதக் கட்டணமும் அறவிடப்படவில்லை.

• 7 கப்பல்களின் நிலக்கரி தரமற்றவை என ஆய்வக அறிக்கைகள் உறுதிப்படுத்தியிருந்தும், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2005ஆம் ஆண்டு உர நிறுவனமொன்றின் அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில், அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான நட்டத்தை ஏற்படுத்திய ஊழல்வாதிகளுக்கு எதிராகத் தான் செயற்பட்ட விதத்தை அமைச்சர் நினைவு கூர்ந்தார். அக்காலத்தில் இருந்த ஊழல் நிறைந்த தலைவர்களைச் சிறையிலடைக்க நடவடிக்கை எடுத்தமையால் தனக்குக் கொலை அச்சுறுத்தல்கள் கூட விடுக்கப்பட்டதாகவும், அன்றைப் போலவே இன்றும் ஊழலுக்கு எதிராகத் தான் உறுதியாக நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தனக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் எதிர்க்கட்சிக்குச் சவால் விடுத்த அமைச்சர், தேசிய மக்கள் சக்திக்குள் (NPP) எந்தவொரு ஊழல்வாதிக்கும் இடமில்லை என்றும், தவறியேனும் ஏதேனும் ஊழல் இடம்பெற்றால் அதற்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுப்பது தனது கட்சியே என்றும் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button