தொழிலாளர் தின மேடையொன்றில் அரசியல்வாதிகளைச் சிறைவைப்பது தொடர்பில் உரையாற்றப்பட்டது இதுவே முதல் முறை ; நாமல்

தொழிலாளர் தின மேடையொன்றில் தொழிலாளர்களைப் புறக்கணித்து, அரசியல்வாதிகளைச் சிறைவைப்பது தொடர்பில் உரையாற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கிய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“எங்களை அச்சுறுத்தி அரசியல் செய்ய ஜனாதிபதி நினைப்பாரானால், அது தவறான செயலாகும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்சவைச் சிறைக்கு அனுப்புவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியே தீர்மானிக்க வேண்டும். ஆனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதனைவிடப் பாரிய சவால்களைச் சந்தித்தவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த நாமல் ராஜபக்ச, தேசிய மக்கள் சக்தியினரின் இந்த முயற்சியானது ஒரு பெரிய விடயமல்ல எனவும் குறிப்பிட்டார்.
மேலும், 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தைப் பிறிதொருவரின் கணக்கில் வைப்பிலிட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விடயத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பல சந்தேகங்கள் எழுகின்றன; அதனையும் இந்த அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.



