1.42 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் அறிவிப்பு

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 150 சதவீத வருமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1.42 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மொத்த வருமானத்தில் பின்னவல யானைகள் சரணாலயத்தினூடாக 61.4 சதவீத வருமானம் கிடைத்துள்ளது.
இதன்படி, பின்னவல யானைகள் சரணாலயத்தினூடாக மாத்திரம் 876 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மொத்த வருமானத்தில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையினூடாக 22 சதவீத வருமானமும், ரிதியகம சபாரி பூங்காவினூடாக 9 சதவீத வருமானமும் பின்னவல திறந்த மிருகக்காட்சிசாலையினூடாக 7.5 சதவீத வருமானமும் கிடைத்துள்ளன.
ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் அதிக வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திலும் அதிக வருவாயை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன மாரசிங்க தெரிவித்துள்ளார்



