12வது மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்களும் வெளியாகின.
கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12வது மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடிதம் எழுதி வைத்தே குறித்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக பொரளை பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நேற்று (10) இரவு பொரளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து 16 வயது பாடசாலை மாணவி குதித்துள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் உள்ள பெரிய பெண்கள் கல்லூரி ஒன்றில் 10ம் தரத்தில் கல்வி கற்று பொரளை, சர்ப்பன்டைன் வீதி பகுதியில் வசித்து வந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி சில காலமாக மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததாக சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.