இந்தியா இலங்கையின் நம்பகமான நண்பராக தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்தியா இலங்கையின் நம்பகமான நண்பராக தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.
இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கம், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில், வியாழக்கிழமை (8) நிறுவப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தக் கூட்டத்தில் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பகிரப்பட்ட வரலாறு, மதம் மற்றும் கலாச்சாரத்தின் இணையற்ற தொடர்பை வலியுறுத்தினார். இந்தியா இலங்கையின் நம்பகமான நண்பராக தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளதாகவும், இருதரப்பு கூட்டாண்மையின் தொடர்ச்சியான விரிவாக்கத்தை வரவேற்றதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் குழுக்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 100 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் போது, சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜே.சி. அலவதுவல, தனுர திசாநாயக்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் சங்கத்தின் பிரதி தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் அனுஷ்கா திலகரத்ன ஆகியோர் உதவிச் செயலாளர்களாகவும், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சங்கத்தின் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்திய பாராளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீண்டும் கூட்டியதற்காக சபாநாயகருக்கும் சக எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்து சிறப்பு கடிதம் அனுப்பியிருந்தார்.

