டெல் அவிவ் இராணுவ தலைமையகம் மீது ஈரான் தாக்குதல் !

இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்படபல நகரங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் இராணுவ தலைமையகம் உட்பட பல கட்டடங்கள் தகர்க்கப்பட்டன.
நேற்று முன்தினம் மாலை இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 150 இடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் ராணுவ மையங்கள், விமானப்படை தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து, டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல நகரங்களிலும் சைரன் மூலம்மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பீதியடைந்த மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர்.
எதிரி நாடுகளின் வான் தாக்குதலை சமாளிக்க அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு ஏவுகணைகளை இஸ்ரேல் பயன்படுத்தி வந்தது. இந்த ஏவுகணைகள் நேற்று முன்தினம் இரவு முதல் வானில் பாய்ந்தன. ஆனால், நேற்று ஈரான் நடத்திய தாக்குதலை, இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணைகளால் முற்றிலும் தடுக்க முடியவில்லை. இதனால், டெல் அவிவ் நகரில் உள்ள இராணுவ தலைமையகம் மீது குண்டுகள் விழுந்து வெடித்தன.
ஜெருசலேம் நகர், ரிசான் லெசியான் ஆகிய பகுதிகள் மீது நேற்று அதிகாலை ஏவுகணைகள் வீசப்பட்டதில் ஏராளமான குடியிருப்புகள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. (a)

