இன்று காலை துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொ*ல்லப்பட்ட நபர் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டவர், இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர், பூசா சிறையிலுள்ள ‘லொக்கு பெட்டி’ பாதாள உறுப்பினருடன் நேற்றிரவும் தொலைபேசியில் பேசியவர் போன்ற தகவல்கள் வெளியாகின

அம்பலாங்கொடை நகரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் இன்று (22) முற்பகல் அவர் பணியாற்றும் நிறுவன வளாகத்திற்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைக்கு பின்னால் பாதாள உலகத் தொடர்பு இருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அம்பலாங்கொடை நகர சபைக்காகப் போட்டியிட்ட ஸ்ரீரன் கோசல டி சில்வா என்பவராவார்.
இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
ஆரம்பத்தில் துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட முற்பட்ட போது, கைத்துப்பாக்கி இயங்காமையினால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
இதனால் துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பியோடிய நிலையில், இலக்கு வைக்கப்பட்ட நபர் அவனைத் துரத்திச் சென்றுள்ளார்.
எனினும், மிகக் குறுகிய நேரத்தில் வேறொரு துப்பாக்கியுடன் மீண்டும் வந்த துப்பாக்கிதாரி, கோசல டி சில்வா நோக்கிச் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார்.
இதில் கோசல டி சில்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் துப்பாக்கிதாரிகள் பிரவேசித்த மோட்டார் சைக்கிள் பின்னர் அந்தாகல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
உயிரிழந்த நபர் 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் நடந்த இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், களுத்துறை எதனமடல பகுதியில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பாதாள குழுத் தலைவர் ‘சமயங்’ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டவராவார்.
கொலை செய்யப்பட்டவரின் கைப்பேசியை பரிசோதித்தபோது, அவர் பூசா சிறையிலுள்ள ‘லோகு பெட்டி’ எனும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினருடன் நேற்று இரவும் பேசியுள்ளமை தெரியவந்துள்ளது.
அவர் லோகு பெட்டியுடன் மாத்திரமன்றி, அவரது எதிராளியான ‘கரந்தெனிய சுத்தா’ மற்றும் ‘கொஸ்கொட சுஜி உள்ளிட்ட பலதரப்பட்ட பாதாள உலகக் கும்பல்களுடனும் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளார்.
இவர்கள் பலரின் பணப் பரிமாற்றங்களை இவரே கையாண்டு வந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்தக் கொலையை எந்தத் தரப்பு நடத்தியது என்பதை உறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



