VIDEO > சுற்றுலா தளத்தில் இருந்து 100 அடி பள்ளத்தில் வீழ்ந்த சுற்றுலாப் பயணியின் குழந்தை – மீட்புக் குழுவினரின் அதிரடி முயற்சியால் காப்பாற்றப்பட்ட சம்பவம்

இன்று எல்ல – சிறிய ஆடம்ஸ் பீக் (Little Adam’s Peak) பகுதியில் உள்ள செங்குத்தான மலை உச்சியிலிருந்து தவறி விழுந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவரின் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரபல சுற்றுலாத் தலமான இங்கு, செல்பி எடுக்க முயன்றபோது அக்குழந்தை சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ‘flying ராவணா’ (Flying Ravana) சாகச பூங்காவின் முதலாவது பதில் மீட்புக் குழுவினர் (First Responder Rope Rescue Team) விரைந்து வந்து அவசர மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
சவாலான நிலப்பரப்புக்கு மத்தியிலும், மீட்புப் படையினர் வெற்றிகரமாக குழந்தையைச் சென்றடைந்து பாதுகாப்பாக மீட்டனர்.
குழந்தை காயமின்றி மீட்கப்பட்டதைக் கண்டு அவரது தாய் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிம்மதி அடைந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
உயரமான சுற்றுலாத் தலங்களில், குறிப்பாக மலை விளிம்புகளில் நின்று புகைப்படங்கள் அல்லது செல்பி எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.



