News
மோட்டார் சைக்கிளில் சென்று வாகனங்களை உடைத்து சேதப்படுத்தி வந்த 29 வயது நபர் கைது

கடுவலை – கொழும்பு (கொள்ளுப்பிட்டி) வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர், ஆயுதம் போன்ற ஒரு பொருளைக் கொண்டு வீதியில் பயணித்த பல வாகனங்களைத் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
இந்தச் சம்பவம் ஜனவரி 12ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கடை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சந்தேக நபரைப் பின்தொடர்ந்து சென்று, சிறிது நேரத்திலேயே அவரை கைது செய்துள்ளனர்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்தச் சம்பவத்தின் போது நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ராகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


