நாடளாவிய ரீதியில் குரங்குகள் தடுப்பு மையங்கள் அமைக்க தீர்மானம்..

வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கையாக, தீவின் முதலாவது குரங்குகள் தடுப்பு மையம் மாத்தளை மாவட்டத்தில் களுகங்கா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி சமத் லக்ஷ்மன் பெரேரா அவர்கள் குறிப்பிடுகையில், 150 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பரிந்துரையும் மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளன.
இந்த மையம், விலங்குகள் மீண்டும் சூழலுக்குத் திரும்ப முடியாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது. தெரிவு செய்யப்பட்ட இப்பிரதேசத்தில் விலங்குகளுக்குத் தேவையான இயற்கை உணவுகள் காணப்படுவதுடன், தேவைப்படின் மேலதிக உணவு மற்றும் நீர் வசதிகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாத்தளை நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் குரங்கு கூட்டங்களை பாதுகாப்பாகப் பிடித்து இந்த மையத்திற்கு அனுப்புவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவியல் முறையாக, பெண் குரங்குகளின் கருப்பைக்குள் பொருத்தப்படும் சிறிய அளவிலான பிறப்புக்கட்டுப்பாட்டு வளையங்களை (Loops) பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலநிலை காரணிகளினால் விலங்குகளை மாகாணங்களுக்கு இடையே இடமாற்றம் செய்வதில் சிரமங்கள் நிலவுவதால், எதிர்காலத்தில் நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இவ்வாறான ஒன்பது மையங்களை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மாத்தளை நகரில் பாதிப்பை ஏற்படுத்தும் விலங்குகள் மட்டுமே இங்கு தங்கவைக்கப்படும். வனப்பகுதிகளில் வாழும் விலங்குகளை அவற்றின் இயற்கையான சூழலிலேயே வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலேசியா போன்ற நாடுகளில் ஏற்கனவே வெற்றிகரமாக இயங்கி வரும் இவ்வாறான மையங்களை முன்மாதிரியாகக் கொண்டு, இலங்கையிலும் இது ஒரு ஆராய்ச்சி அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.



