சதோச வெங்காயத்தை தனியாருக்கு விலை குறைத்து விற்று மோசடி செய்த முன்னாள் பிரதிப் பொது மேலாளர் உள்ளிட்ட மூவர் கைது

லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது மேலாளர் (நிதி) உட்பட மூவர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (12 பிப்) கைது செய்யப்பட்டனர்.
தனியார் தரப்பு ஒன்றிற்கு 54,860 கிலோகிராம் வெங்காயத்தை கிலோ ஒன்றுக்கு 135 ரூபாய் வீதம் விற்பனை செய்தமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் அனுமதி இல்லாமலும், லங்கா சதொச விதிமுறைகளை மீறியும் மேற்கொள்ளப்பட்ட இந்த கொடுக்கல் வாங்கல், தனியார் வர்த்தகர் ஒருவருக்கு நன்மை அளிக்கும் நோக்கில் அமைந்திருந்ததுடன், நிறுவனத்திற்கு 17,006,600 ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
உதவி செய்தமை, ஆதரவு வழங்கியமை மற்றும் சதி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது மேலாளர் (நிதி) மற்றும் இரு வர்த்தகர்கள் நேற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டனர்.
சந்தேகநபர்கள் பின்னர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டனர்.



