நாட்டின் பல பிரதான நகரங்களில் Gas தட்டுப்பாடு !

கொழும்பு, கண்டி மற்றும் காலி உட்பட நாட்டின் பல பிரதான நகரங்களில் லிட்ரோ (Litro) மற்றும் லாப்ஸ் (Laugfs) ஆகிய இரு வகை எரிவாயுக்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
தற்போது சந்தைக்கு கிடைக்கும் எரிவாயுவின் அளவு மிகவும் குறைவாக இருப்பதாகவும், சில வர்த்தகர்கள் இந்தத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். எவ்வாறாயினும், சந்தைத் தேவைக்கு ஏற்ப போதுமான கையிருப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பல வருடங்களாக இலங்கைக்கு எரிவாயுவை விநியோகித்து வந்த ஓமான் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஓ.க்யூ டிரேடிங் (OQ Trading) நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்தப் பணிகளில் இருந்து நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட புதிய நிறுவனமான ஜியோ கேஸ் டிரேடிங் (Geo Gas Trading) நிறுவனத்திற்கு எரிவாயு விநியோக ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.
எரிவாயு விநியோகத்தில் போதிய சர்வதேச அனுபவமோ அல்லது வலையமைப்போ இல்லாத ஒரு நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் பெப்ரவரி மாதமளவில் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த நேரத்தில் பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டினர். எனினும், அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், புதிய விநியோகஸ்தரின் கீழ் எந்த வகையிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என அப்போது தெரிவித்திருந்தது.



