News

பிக்குகளை எதிர்ப்போர் யாராக இருந்தாலும் எதிர்ப்போம் –  உயிரிழக்கும் வரை பின்வாங்க மாட்டோம் ; முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

“பிக்குகளை எதிர்ப்போர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக முன்வைத்த காலை நாம் ஒருபோதும் பின்வைக்க மாட்டோம். உயிரிழக்கும் வரை பின்வாங்க மாட்டோம். இதுவே எங்களின் கொள்கை. இந்த நாட்டையும் இனத்தையும் மொழியையும் பாதுகாத்துக்கொள்வதே எங்களின் அவசியம். நாளை இடம்பெறவுள்ள மகா சங்க மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கிறோம். 

அவ்வாறு ஜனாதிபதி வருவார் என்றால் அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவரை மாத்திரமே மேடைக்கு ஏற்றுக்கொள்வோம்” என்று நாரஹேன்பிட்ட அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அறிவித்துள்ளார்.



இது தொடர்பில் விளக்கமளித்து கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ‘‘சமயச் சீரழிவு, கலாசாரம், சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படும் சேறுபூசல்கள் அதிகரித்துள்ளன.



சமூக வலைத்தளங்களிலுள்ள நல்ல மனிதர்கள் இன்று எங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி புதிய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக நாங்கள் இந்த மாநாட்டை நடத்தவில்லை. தேரர்களும் ஏனைய சமயத் தலைவர்களும் இணைந்தே இந்த மாநாட்டை நடத்துகிறோம்.



எந்தவொரு அரசியல்வாதிக்கும் ஆதரவாக இந்த மாநாடு நடத்தப்படவில்லை. வாழ்வதற்கு விருப்பமென்றால் இந்த செயற்பாடுகளை நிறுத்துமாறு எனக்கு ஒருவர் அச்சுறுத்தல் விடுக்கிறார். வாழ்வதற்கு விரும்பினால் தவறு இழைக்க வேண்டாம் என்றே புத்த பெருமான் கூறியுள்ளார்.



ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்னிடம் பேசியிருந்தார். அவரையும் திட்டுவதாக கூறுகிறார். அவரை திட்டுவதால் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஜனாதிபதியும் எங்களின் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும். இதில் ராஜபக்ஷ நிக்காயவோ, திலித் ஜயவீர நிக்காயவோ, பிரேமதாச நிக்காயவோ இல்லை. புத்த நிக்காய மாத்திரமே இருக்கிறது.



அதேபோன்று, அபயராம விகாரையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. எங்களை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களுடன் நேருக்கு நேர் பேச முன்வர வேண்டும். இந்த அரசாங்கம் கவிழ்ந்து வேறு அரசாங்கம் ஆட்சிக்கு வருமென்ற பயம் இருக்குமாக இருந்தால் அது அவர்களின் சிந்தனை. அரசாங்கமொன்றை கவிழ்ப்பதற்கு நாங்கள் எப்போதும் முயற்சித்ததில்லை. அவ்வாறு சிந்திக்கப் போவதுமில்லை. ஆனால், என்னால் அரசாங்கமொன்றை வழிநடத்த முடியுமென்றால் கட்டாயம் அரசாங்கத்தை கவிழ்ப்பேன். ஆனால் என்னால் அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாது.



தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் சிக்கலுக்குள்ளான சந்தர்ப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணி தலைவரின் இறந்த உடலை கொண்டுச் செல்ல இடமளிக்காத சந்தர்ப்பத்தில் நானும் சோதிப தேரருமே அதனை பாதுகாத்துக் கொடுத்தோம். அபயராம விகாரையிலேயே இருந்தார்கள். ஆர். பிரேமதாச சிக்கலுக்குள்ளாகியபோதும் நாங்களே முன்னிருந்தோம்.



ஜனாதிபதியின் அருகிலிருக்கும் ஒருசில கூத்தாடிகள் அவரை தவறாக வழிநடத்தினாலும் இந்த அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால், ஜனாதிபதியின் அருகிலிருக்கும் அவதூறு பேசும் கூத்தாடிகளை நீக்க வேண்டும். 8,000 வனவாசிகள் இருப்பதாக லால் காந்த் கூறுகிறார். அப்படியென்றால், புத்தப் பெருமானும் வனவாசி தான்.



இந்த நாட்டின் பிக்குகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும். இதுவே எங்களின் எதிர்பார்ப்பாகும். எங்களுக்கு போலி வாக்குறுதிகள் வேண்டாம். உண்மையான வாக்குறுதியே எங்களுக்கு அவசியம். அவ்வாறானவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மாறாக, நாட்டை வீணடிப்பதற்கான முயற்சிகளை செய்யும் ஊடகங்களினூடாக சேறு பூசும் பிக்குகளை எதிர்க்கும் யாராவது இருப்பார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக முன்வைத்த காலை எப்போதும் பின் வைக்க மாட்டோம். உயிரிழக்கும் வரை பின்வாங்க மாட்டோம். இதுவே எங்களின் கொள்கை.



இந்த நாட்டையும் இனத்தையும் மொழியையும் பாதுகாத்துக்கொள்வதே எங்களின் அவசியம்.நாளைய மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதிக்கு பகிரங்க அழைப்பு விடுக்கிறோம். அவ்வாறு ஜனாதிபதி வருவார் என்றால் அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவரை மாத்திரமே மேடைக்கு ஏற்றுக்கொள்வோம். நாட்டுத் தலைவர் என்ற அடிப்படையிலும் அரச தலைவர் என்ற அடிப்படையிலும் அவரை பொறுப்பேற்போம். அதன்போது கலந்துரையாடல்களை ஏற்றுக்கொள்வோம்’’ என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button