ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் கந்தகார் ஆகிய நகரங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியது பாகிஸ்தான் – நேரடிப் போர் ஆரம்பம் எனவும் பாகிஸ்தான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் கந்தகார் ஆகிய நகரங்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுடன் தாங்கள் இப்போது “நேரடிப் போரில்” (Open War) ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் நிலவி வந்த பதற்றத்தைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாகவே இந்த வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.
காபூல் மற்றும் கந்தகாரில் உள்ள தாலிபான் அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன.
சர்வதேச நாடுகள் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளும் போருக்குத் தயாராகி வருவதால் தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.



