ஈரானிய மாலுமிகளை மீட்கும் பணியில் இலங்கை வழங்கிய உதவிக்கு மிகவும் நன்றி ; ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராகச்சி தெரிவிப்பு

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராகச்சி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட சமீபத்திய இராணுவ மோதல்களைத் தொடர்ந்து பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க இந்தியா மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் தனித்தனியாக தொலைபேசி மூலம் உரையாடினார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடனான கலந்துரையாடல்களின் போது, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய இராணுவ ஆக்கிரமிப்பு என ஈரான் வர்ணித்ததற்குப் பின்னரான நிலைமை குறித்து அராகச்சி பேசியதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்புகளின் போது, ஈரான் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்களைக் கண்டித்த அராகச்சி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டிக்குமாறு அரசாங்கங்களையும் ஐக்கிய நாடுகள் சபையையும் கேட்டுக்கொண்டார்.
ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் தேனா (IRIS Dena) மீதான தாக்குதல் குறித்தும் அவர் கவலை எழுப்பினார். ஈரானின் கரையில் இருந்து சுமார் 2,000 மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி இக்கப்பல் இலக்கு வைக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தை தொடர்புடைய சர்வதேச அமைப்புகளில் சட்ட மற்றும் சர்வதேச வழிகள் ஊடாக முன்னெடுக்க ஈரான் உத்தேசித்துள்ளதாக அராகச்சி தெரிவித்தார்.
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத்துடனான உரையாடலின் போது, தேனா போர்க்கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்கும் பணியில் இலங்கை வழங்கிய உதவிக்கு ஈரானிய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த வார தொடக்கத்தில் இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆபத்தில் சிக்கியிருந்த கப்பலுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படை சொத்துக்களை நிலைநிறுத்தி, பல மாலுமிகளை மீட்டதுடன், அவர்கள் பின்னர் சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே தூதரக தொடர்புகள் மற்றும் ஆலோசனைகளைத் தொடர்வதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பும் வலியுறுத்தின.



