ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களில் பங்கேற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்தவொரு உறுப்பு நாடுகளும், ஈரானின் பதில் தாக்குதல்களுக்கு “சட்டபூர்வமான இலக்குகளாக” மாறும்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களில் பங்கேற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எந்தவொரு உறுப்பு நாடுகளும், ஈரானின் பதில் தாக்குதல்களுக்கு “சட்டபூர்வமான இலக்குகளாக” மாறும் என ஈரானிய பிரதி வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த்-ரவாஞ்சி (Majid Takht-Ravanchi) தெரிவித்துள்ளார்.
‘France 24’ தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸ், கிரீஸ் மற்றும் இத்தாலி போன்ற சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளன. அத்துடன், பல உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பிராந்தியத்தில் ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து இராஜதந்திர ரீதியிலான தீர்வை எட்டுமாறு அவர்கள் பெரிதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஈரானுடனான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறையைக் கண்டறிய பேர்லின் தனது பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஜெர்மன் அதிபர் ஃப்ரெடெரிக் மெர்ஸ் (Friedrich Merz) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அதேவேளை, தனது நாடு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்குகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



