ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டு வருவதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான கேள்வி அசாதாரணமான முறையில் அதிகரித்து வருவதாலும், நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் QR குறியீடு முறைமையைச் செயற்படுத்த அரசாங்கம் கடந்த 16ஆம் திகதி முதல் நடவடிக்கை எடுத்துள்ளது.



