News

மகிந்த மற்றும் நாமலின் பெயரை கூறும்படி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்னை மிரட்டினார்.

மஹிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்‌ஷவின் பெயரை கூறுமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. ரங்க திசாநாயக்க தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன நீதி மன்றில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த வாக்குமூலத்தில்..

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. ரங்க திசாநாயக்க , “என்னைத் தெரியும் தானே?” என்று கேட்டார். அதற்கு நான் “ஆம் சார்” என்று பதிலளித்தேன்.

இது உனக்குக் கிடைக்கும் கடைசிச் சந்தர்ப்பம். இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் இவரைப் போலவே ஒருவர் வந்தார். அவர் யார் என்று உனக்கும் தெரிந்திருக்கும் தானே? தெரியாவிட்டால் நான் சொல்கிறேன். அவர் கெஹெலியவின் வழக்கோடு சம்பந்தப்பட்டவர். அவருக்கு நான் இரண்டு சந்தர்ப்பங்களை வழங்கினேன். அவர் அவற்றைப் பயன்படுத்தவில்லை. அவருக்கு குற்றப்பத்திரிகை (Indictment) தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உன்னுடன் இருப்பவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். பெரியவரின் பெயரையும் சிறியவரின் பெயரையும் சொல். மற்றது, உனது மனைவியைப் பற்றி…”

ஏன் விளங்குவதில்லையா? மஹிந்த மற்றும் நாமல் பற்றிச் சொல். நான் நீதித்துறையிலிருந்து (Judiciary) இதற்காக வந்தது அனைத்தையும் சுத்தப்படுத்துவதற்கே. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள். இல்லையென்றால் உனக்கும் அந்த மனிதன் செய்துகொண்டதுதான் நடக்கும். நீயே கழுத்தில் கயிறு போட்டுக்கொள்ளும் நிலைக்கு நான் வேலைகளைச் செய்வேன்.”

“மேற்கூறிய மிரட்டல் காரணமாக நான் பயமும் அதிர்ச்சியும் அடைந்தேன். எனக்கும் என் வாழ்க்கையை வெறுக்கச் செய்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனதிற்குத் தாங்கிக்கொள்ள முடியாத அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள் என்ற பயத்தினால், எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரிக்குத் தேவையானவாறு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் எனது மனைவியின் பெயர்கள் உட்பட அனைத்தையும் சேர்த்து வாக்குமூலம் அளித்தேன்.”

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களோ, அல்லது எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் செயல்பாட்டில் அவர்கள் ஏதேனும் அழுத்தம் கொடுத்தார்கள் அல்லது முறையற்ற பங்களிப்பை வழங்கினார்கள் என்றோ எனது வாக்குமூலத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த விடயங்கள் என்னால் தன்னிச்சையாக (சுயமாக) தெரிவிக்கப்பட்டவை அல்ல. அவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் மிரட்டல் காரணமாகவே கூறப்பட்டவை.” என குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button