நிலக்கரி தரம் குறைந்தது எனத் தெரியவந்தது..ஆய்வக அறிக்கைகளின்படி அந்த நிலக்கரியிலிருந்து பெறக்கூடிய சக்தி அளவு (Energy output) குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலக்கரி விநியோகிக்கும் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அபராதத் தொகையினால் அந்த நிறுவனம் திவாலானதாக அறிவித்தால், நாட்டின் நிலக்கரி விநியோகம் பாரிய ஆபத்துக்குள்ளாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அபராதம் வசூலிப்பதை விட, அதன் மூலம் விநியோகச் சங்கிலிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிலக்கரி கொள்வனவுக்கான டெண்டர் நடைமுறைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், ஆய்வக அறிக்கைகளின்படி அந்த நிலக்கரியிலிருந்து பெறக்கூடிய சக்தி அளவு (Energy output) குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு 2 மில்லியன் டாலர் (300 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம்) பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. “இந்த வரம்பற்ற அபராதத்தினால் ஒருவேளை இந்த நிறுவனம் தான் திவாலாகிவிட்டதாகவும், தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினால், எம்மால் வழக்குத் தொடர்ந்து அபராதம் பெற முடியுமே தவிர, அதன் பிறகு நிலக்கரிக்கு எங்கே போவது?” என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலக்கரி கொள்வனவு என்பது சாதாரண ஒரு கடையில் பாண் வாங்குவது போன்ற எளிய விடயம் அல்ல எனச் சுட்டிக்காட்டிய ரத்நாயக்க அவர்கள், மாற்று வழியை நாடுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார். தற்போது இலங்கையிடம் 30 நாட்களுக்கு மட்டுமே போதுமான எரிபொருளை சேமித்து வைக்கும் வசதி இருப்பதாகவும், அதற்கு மேல் இலவசமாக எரிபொருள் கிடைத்தாலும் அவற்றை சேமிக்க வசதிகள் இல்லை என்றும் அவர் வெளிப்படுத்தினார்.
நாட்டின் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைப்பதற்கான திட்டங்கள் கடந்த கால அரசாங்கங்களிடம் இல்லாமையை அமைச்சர் கடுமையாக விமர்சித்தார். “எறும்பு கூட மழைக்காலத்திற்காக வெயில் காலத்திலேயே உணவைச் சேமித்து வைக்கிறது. குறைந்தபட்சம் அந்த எறும்புக்கு இருக்கும் அந்த மூலோபாய அறிவு கூட எமது ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை” என அவர் தெரிவித்தார். அரிசி, எரிபொருள், நிலக்கரி மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்கும் முறைமை இன்றி, நாடு “அன்றாட தேவையை” மட்டும் பூர்த்தி செய்யும் விதமாகவே கொண்டு செல்லப்பட்டதாகவும், தற்போது விநியோகச் சங்கிலி இரண்டு வாரங்கள் போன்ற குறுகிய காலத்திற்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் விளக்கினார்.
சுமார் 20 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத, கசிவு ஏற்படும் எரிபொருள் குழாய் கட்டமைப்புகளை பழுதுபார்க்கவும், எரிபொருள் சேமிப்பு வசதிகளை விரிவுபடுத்தவும் தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே முதலீட்டுத் திட்டங்களைத் தயாரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். உலக அரசியல் சூழ்நிலைகள் மற்றும் யுத்த சூழல்களுக்கு மத்தியிலும், மோசடி, ஊழல் மற்றும் வீணடித்தல் இன்றி அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான முறையான திட்டத்துடன் அரசாங்கம் முன்னோக்கிச் செல்லும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



