4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்த நபருக்கு, இன்று நீதிமன்றம் 21 நாட்கள் சிறைத்தண்டனையும் 1,500 ரூபாய் அபராதமும் விதித்தது.

சட்டவிரோதமான முறையில் 4 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய நபர் ஒருவருக்கு, நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (26) 21 நாட்கள் சிறைத்தண்டனையும் 1,500 ரூபாய் அபராதமும் விதித்தது.
1979 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் (ஒழுங்குமுறை மற்றும் விநியோகக் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் கொபேகன பொலிஸாரால் சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார், விசாரணையின் போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
எதிர்வரும் சனிக்கிழமை (29) நடைபெறவுள்ள தான நிகழ்வை முன்னிட்டு, சந்தேக நபரின் வீட்டு வளாகத்தை சுத்தம் செய்ய புல் வெட்டும் இயந்திரத்தில் பயன்படுத்துவதற்காகவே இந்த பெட்ரோல் வைக்கப்பட்டிருந்ததாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த எரிபொருள் விற்பனைக்காகவோ அல்லது சட்டவிரோத விநியோகத்திற்காகவோ வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை வலியுறுத்திய பிரதிவாதி தரப்பு, மத நிகழ்வு நடைபெறவுள்ளதை உறுதிப்படுத்துவதற்காக உள்ளூர் விகாரையின் தலைமை தேரரிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தையும் சமர்ப்பித்தது.
நுகர்வோர் பெட்ரோலை வைத்திருக்க சட்டப்படி அனுமதி உண்டு என்றாலும், சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவு குறித்துத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்பதால், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சட்ட ரீதியான கவலைகளையும் சட்டத்தரணி முன்வைத்தார்.
இருப்பினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளையும் சந்தேக நபரின் குற்ற ஒப்புதலையும் கருத்தில் கொண்ட நீதவான், இந்தத் தண்டனையை விதித்தார்.



