News

பொருட்களின் விலை உயரும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் – BBC

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: உலகளாவிய ரீதியில் எரிபொருள் முதல் மருந்து வரை விலை உயரும் அபாயம்

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக, ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக இடம்பெறும் எரிபொருள் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தடைகள், உலகளாவிய எரிசக்தி விலைகள் கடுமையாக உயரக் காரணமாயுள்ளன. இதன் விளைவாக, இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் விலைகள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த மோதலால் எரிபொருள் மாத்திரம் பாதிக்கப்படவில்லை. ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக சர்வதேச விநியோகச் சங்கிலிக்கு உட்படுத்தப்படும் பல முக்கிய இரசாயனங்கள் மற்றும் ஏனைய பொருட்களும் இதில் அடங்கும்.

ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாக நாளொன்றுக்கு இடம்பெற்ற கப்பல் போக்குவரத்து 100-க்கும் அதிகமான எண்ணிக்கையிலிருந்து தற்போது மிகக் குறைந்த அளவிற்கே வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மருந்துகள் வரை அனைத்துப் பொருட்களினதும் விலைகள் உயரக்கூடும் என BBC Verify தெரிவிக்கிறது.

இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் Kiel நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளபடி, ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் பொருட்களின் விலை அதிகமாக உயரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மீதான தாக்கம்

பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, வளைகுடா நாடுகள் இவற்றை ஏற்றுமதிக்காக பாரிய அளவில் உற்பத்தி செய்கின்றன. உலகளாவிய விவசாய உற்பத்திக்கு இன்றியமையாத ஒரு பொருள் உரமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, யூரியா, பொட்டாஷ், அமோனியா மற்றும் பாஸ்பேட் போன்ற உலகளாவிய உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு பொதுவாக ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாகவே கொண்டு செல்லப்படுகிறது. மோதல் தொடங்கியதிலிருந்து உரம் சார்ந்த தயாரிப்புகளின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வர்த்தக அமைப்பு (WTO) சுட்டிக்காட்டுகிறது.

வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் பிரதான பயிர்ச்செய்கை காலமாகும். எனவே, உரத் தட்டுப்பாடு விவசாயத்தைப் பாரியளவில் பாதிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உரப் பயன்பாடு குறைவது ஆண்டின் இறுதியில் அறுவடை வீழ்ச்சியடைய வழிவகுக்கும்.

“ஹோர்முஸ் ஜலசந்தியின் ஒரு குறுகிய கால மூடல் கூட முழுமையான பயிர்ச்செய்கை காலத்தையும் சீர்குலைக்கக்கூடும். ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்ட பின்னரும் உணவுப் பாதுகாப்பிற்கான தாக்கம் நீண்ட காலத்திற்கு நீடிக்கும்” என Kiel நிறுவன ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆலும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 5.2% ஆலும் உயரக்கூடும் என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மொத்த உணவு விலையேற்றத்தின் படி மோசமாகப் பாதிக்கப்படவுள்ள நாடுகள்:

1. சாம்பியா (31%)

2. இலங்கை (15%)

3. தாய்வான் (12%)

4. பாகிஸ்தான் (11%)

தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறை

ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு, எரிவாயு உற்பத்தி செய்யும் கட்டாரின் ராஸ் லஃப்பான் (Ras Laffan) பிரதான ஆலை தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இந்தச் சேதங்களைச் சீர்செய்ய 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என கட்டார் அரசாங்கம் எச்சரித்துள்ளது, இது விநியோகம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹீலியம் விநியோகத் தடை காரணமாக ஸ்மார்ட்போன்கள் முதல் தரவு மையங்கள் (Data centers) வரையிலான நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் விலைகள் உயரக்கூடும். குறிப்பாக, எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் பரிசோதனைகளின் விலை அதிகரிக்கக்கூடும் என உலகளாவிய சுகாதார சிரேஷ்ட உறுப்பினர் பிரசாந்த் யாதவ் எச்சரித்துள்ளார்.

“ஒரு MRI இயந்திரத்தின் காந்தத்தைக் குளிர்விக்க 1,500 முதல் 2,000 லிட்டர் ஹீலியம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஸ்கேன் செய்யும் போதும் சிறிதளவு ஹீலியம் ஆவியாகிறது. ஹீலியம் என்பது தரவு மையங்கள் மற்றும் AI தொழிற்சாலைகளுக்கு மாத்திரமல்ல, மருத்துவத் துறைக்கும் மிகவும் முக்கியமானது,” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளைத் தயாரிப்பதற்கான பிரதான மூலப்பொருட்களான மெத்தனால் மற்றும் எத்திலீன் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் வளைகுடா நாடுகளிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகின் பொதுவான (Generic) மருந்து ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கை இந்தியா உற்பத்தி செய்கிறது. இவை பெரும்பாலும் துபாய் போன்ற வளைகுடா விமான நிலையங்கள் ஊடாகவே உலகச் சந்தைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது நிலவும் மோதலால் இந்த விமானப் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

பேட்டரி உற்பத்தி மற்றும் ஏனைய தொழில்கள்

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பின் போது கிடைக்கும் கந்தகம் (Sulphur), உரத் தயாரிப்பிற்கும் உலோகச் செயலாக்கத்திற்கும் அவசியமானது. உலகளாவிய கடல்வழி கந்தக வர்த்தகத்தில் பாதி ஹோர்முஸ் ஜலசந்தி ஊடாகவே நடைபெறுகிறது.

தாமிரம், கோபால்ட், நிக்கல் மற்றும் லித்தியம் பிரித்தெடுப்பதற்குத் தேவையான சல்பூரிக் அமிலம் தயாரிக்க கந்தகம் பயன்படுகிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் ட்ரோன்கள் வரை பயன்படுத்தப்படும் பேட்டரிகளின் உற்பத்திக்கு இந்த உலோகங்கள் அவசியமானவை. கந்தக விநியோகம் தடைப்பட்டால், பேட்டரி கொண்ட தயாரிப்புகளின் விலைகள் நுகர்வோருக்கு அதிகரிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Recent Articles

Back to top button