News

“மத்திய கிழக்கு போர் வரைபடம் மாறுகிறது.. யேமனிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்…”

தற்போது நிலவும் மோதல் சூழலுக்கு மத்தியில், யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெற்கு இஸ்ரேலில் உள்ள பீர்ஷெபா (Beersheba) நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை இலக்கு வைத்து பலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தெற்கு பிராந்தியம் முழுவதும் எச்சரிக்கை சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யேமனிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனை இடைமறித்து அழிப்பதற்கான அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய போர்ச் சூழலில், ஹூதி அமைப்பினால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவென பதிவாகியுள்ளது.

கடந்த 2023 அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, 2023 நவம்பர் மாதம் முதல் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீதும் கடல் பிராந்தியத்தின் கப்பல் போக்குவரத்து மீதும் தாக்குதல்களைத் தொடங்கினர். “அமெரிக்காவிற்கு அழிவு, இஸ்ரேலுக்கு அழிவு மற்றும் யூதர்களுக்கு சாபம் உண்டாகட்டும்” என்பதைத் தமது வாசகமாகக் கொண்ட இந்த அமைப்பு, காசா போர் நடைபெற்ற காலத்தில் இஸ்ரேல் மீது டஜன் கணக்கான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

எவ்வாறாயினும், 2025 அக்டோபரில் ஹமாஸ் அமைப்புடன் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்குப் பின்னர், ஹூதி அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்து வந்தது. ஆனால், இந்தப் புதிய தாக்குதலின் மூலம் அவர்கள் மீண்டும் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை தெளிவாகிறது.

இத்தாக்குதலுக்கு மேலதிகமாக பிராந்தியம் முழுவதும் மேலும் பல பதற்றமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன:

• இஸ்ரேலின் வடக்கு நகரமான சபெட் (Safed) உட்பட பல பகுதிகளில் ரொக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

• ஈரான் நடத்திய குரூஸ் ஏவுகணைகள், பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

• ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தாய்லாந்து பிரதமர் ஈரானுடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மேலும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Recent Articles

Back to top button