இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படவிருந்த எரிபொருள் விலை திருத்தம் இம்முறை இடம்பெறாது !

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, திட்டமிடப்பட்ட கால அட்டவணையின்படி இந்த மாத இறுதியில் மேற்கொள்ளப்படவிருந்த எரிபொருள் விலை மாற்றம் இம்முறை இடம்பெறாது எனத் தெரிவித்தார்.
மார்ச் 31 ஆம் திகதி வரை எரிபொருள் விலைகள் அதிகரிக்காது என்ற உத்தரவாதத்தை தர முடியும் எனக்கூறிய அவர் அதன் பின்னர் எவ்வாறான நிலமை ஏற்படும் என்பதை தற்போது கூற முடியாது எனக்கூறினார்.
தற்போதுள்ள விலை சூத்திரத்திற்கு அமைவாக, மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் மூன்று சந்தர்ப்பங்களில் விலைகளில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
தற்போது நாட்டில் கையிருப்பிலுள்ள 92 மற்றும் 95 ரக பெட்ரோல் கையிருப்பு ஜூன் மாதம் முதல் வாரம் வரை போதுமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கைக்கு வருகை தரவுள்ள எரிபொருள் கப்பல்கள் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ள நிலையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இன்றி விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என தலைவர் மேலும் உறுதிப்படத் தெரிவித்தார்.



