நபர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிடுவதற்காக ஒன்றுகூடியிருந்த நான்கு பேர் கைது #இலங்கை

நபர் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிடுவதற்காக ஒன்றுகூடியிருந்த நான்கு பேர், மீட்டியாகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (30) அதிகாலை கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் மீட்டியாகொட பகுதியில் அமைந்துள்ள, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவர் ‘கரந்தெனிய சுத்தா’ என்பவரது சகோதரனின் வீட்டில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 37 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட (Revolver) துப்பாக்கி ஒன்றும், ஆறு தோட்டாக்களும் மீட்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், சந்தேக நபர்களிடமிருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



