நாட்டின் அன்றைய தலைவர்கள் மின் நிலையங்களை அமைத்திருக்காவிட்டால், இன்று நாட்டில் மின்சாரமே இருந்திருக்காது – நாட்டில் மின்சாரத்தை துண்டிக்க இடமளிக்க மாட்டோம் ; சாமர சம்பத்

எதிர்காலத்தில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டால், அது மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் மட்டுமே செய்யப்பட வேண்டும் எனவும், ஏனைய பொதுமக்களின் வீடுகளில் மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது ,
“ஆரம்பத்திலிருந்தே மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு ஜே.வி.பி எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும்போது அவர்கள் எதிர்த்தார்கள். உமா ஓயா திட்டத்தையும் எதிர்த்தார்கள்.”
“லக் ஷபான நீர்மின் நிலையத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க அமைத்தார். விக்டோரியா, ரன்தெனிகல, கொத்மலை உள்ளிட்ட மகாவலி திட்டத்தின் கீழ் நீர்மின் நிலையங்களை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைத்தது.”
“76 வருட கால ஆட்சியை விமர்சிக்கும் ஜே.வி.பி-யினர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அன்றைய தலைவர்கள் இந்த மின் நிலையங்களை அமைக்காவிட்டால், இன்று வீடுகளில் மின்சாரமே இருந்திருக்காது.
மின் திட்டங்களை எதிர்த்த ஜே.வி.பி-யினருக்கு எங்கள் வீடுகளில் மின்சாரத்தை துண்டிக்க இடமளிக்க முடியாது. அவர்களுக்கு தேவையென்றால் அவர்களின் வீடுகளில் மின்சாரத்தை துண்டித்துக்கொள்ளச் சொல்லுங்கள்.”என்று மேலும் தெரிவித்துள்ளார்



