நிலக்கரி மோசடி தொடர்பாக முஜிபுர் ரஹ்மானால் CID யில் முறைப்பாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இன்று (13) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்றை அளித்துள்ளனர்.
நிலக்கரி டெண்டர் நடைமுறையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த டெண்டரை வழங்கும் போது, ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் குரல் பதிவொன்றின் மூலம் வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
“ஒரு குரல் பதிவு வெளியாகியுள்ளது. அதனைச் செவிமடுக்கும் போது அங்கேயும் ஒரு மோசடி இடம்பெற்றுள்ளது என்பது எமக்குப் புரிகிறது. ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒரு நண்பருக்கு இந்த டெண்டரை வழங்க வேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல் குறித்து அந்தக் குரல் பதிவு வெளியாகியுள்ளது. அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியே நாம் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்தோம். இந்தக் குரல் பதிவில் இடம்பெறும் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் பெயர் மற்றும் அவருக்கு நெருக்கமான வர்த்தகர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இதிலும் தெளிவாக ஒரு மோசடி இடம்பெற்றுள்ளது.” என கூறினார்.



