எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.. – நலிந்த

உலகச் சந்தையில் நிலவும் விலை மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உலகின் ஏனைய நாடுகள் எரிபொருள் வரிசைகள் மற்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள போதிலும், இலங்கையில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.
மக்கள் தமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் இந்த மேலாண்மை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டாலும் அதன் முழுமையான சுமையை மக்கள் மீது சுமத்தப்போவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, குறித்த விலை அதிகரிப்பின் கணிசமான பகுதியை திறைசேரி பொறுப்பேற்கும் அதேவேளை, மற்றுமொரு பகுதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்கும் என்றும், மக்கள் மீது ஒரு குறிப்பிட்ட அளவு மாத்திரமே சுமத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நிலவும் யுத்த நிலைமை தணிந்தவுடன், இந்த விலைகளை கூடிய விரைவில் குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.



