எரிசக்தி அமைச்சராக தற்சமயம் அமைச்சரவையில் இருக்கும் ஒருவரையே நியமிக்க அரசாங்கம் தீர்மானம்.

எரிசக்தி அமைச்சராக தற்சமயம் அமைச்சரவையில் இருக்கும் ஒருவரையே நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி அமைச்சுப் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்காமல், அமைச்சரவையில் உள்ள ஒருவருக்கே அந்தப் பொறுப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (17) தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, அந்த அமைச்சுப் பதவி வெற்றிடமானது.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் தாம் பதவியை இராஜினாமா செய்வதாக, குமார ஜயகொடி ஜனாதிபதிக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சரின் இராஜினாமாவைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் படி அந்த அமைச்சின் பணிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, ஜனாதிபதியினால் விரைவில் புதிய எரிசக்தி அமைச்சர் நியமிக்கப்படவுள்ளார்.



