முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை !

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு 2.5 லட்சம் நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (24) வத்தளை நீதவான் காஞ்சனா என் சில்வா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
லங்கா சதொச நிறுவனத்தின் லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மூத்த மகன் ஜொஹான் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளர் உட்பட ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



