திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டாலர் பணம் திருடப்பட்டுள்ளதற்கு ஜனாதிபதிக்குத் தொடர்பிருப்பது விசாரணைகள் மூலம் தெரியவந்தால் எமது பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் அவருக்கு கடும் தண்டனை வழங்குவோம் ; திஸ்ஸ குட்டி

வெளி நாடொன்றின் கடன் கொடுப்பனவு தொடர்பில் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டாலர் பணம் திருடப்பட்டுள்ளதாகவும், அந்தத் திருட்டுக்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் நியமனம் உட்பட அனைத்து நியமனங்களையும் ஜனாதிபதியே மேற்கொள்வதால், அந்த நியமனங்கள் தொடர்பான பொறுப்பு ஜனாதிபதிக்கே சாரும் என திஸ்ஸ குட்டியாராச்சி கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் இச்சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்குத் தொடர்பிருப்பது விசாரணைகள் மூலம் தெரியவந்தால், பொதுப் பணத்தைக் கொள்ளையடித்தமைக்காக அவருக்கு எதிராகத் தண்டனை வழங்கப்படும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
“இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையது குறித்து விசாரணை செய்து, மக்களின் பணத்தைப் பகல் கொள்ளையடிப்பதில் ஜனாதிபதிக்குத் தொடர்பு இருக்குமானால், எமது அரசாங்கத்தின் கீழ் அவருக்குத் தண்டனை வழங்கும் வேலைத்திட்டத்தில் நாம் இருப்போம்” என அவர் கூறியுள்ளார்.



