இலங்கைக்கு கடத்தப்பட இருந்து சிக்கிய “நேச்சர் பவர் பப்பாளி சோப்”கள்

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகப் பகுதியிலிருந்து இலங்கைக்குப் பொருட்கள் கடத்தப்படுவதாக ‘கியூ’ பிரிவு பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ‘கியூ’ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா அவர்களின் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான பொலிஸார் செவ்வாய்க்கிழமை (12) இரவு திரேஸ்புரம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இரவு சுமார் 9:15 மணியளவில், திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள வாடையில், ஒரு ஃபைபர் படகில் சிலர் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். பொலிஸார் அங்கு விரைவதைக் கண்ட கடத்தல்காரர்கள், இருட்டைப் பயன்படுத்தித் தப்பி ஓடினர்.
பின்னர் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், பதிவு எண் இல்லாத இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்ட ‘அதிவேக ஃபைபர் படகு’ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 5 அட்டைப் பெட்டிகளிலிருந்து 1,200 “நேச்சர் பவர் பப்பாளி சோப்”கள் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சோப்புகளின் சர்வதேசச் சந்தை மதிப்பு சுமார் ரூ. 5 இலட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய கடத்தல்காரர்களை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் படகு குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



