ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை இலங்கை நிராகரிக்கும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்மொழியப்பட்டுள்ள தீர்மான வரைவை இலங்கை அரசு நிராகரிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தை இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் அதேவேளையில், வெளிச் சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையின் அதிகாரங்களை நீட்டிக்கும் எந்தவொரு பிரேரணைக்கும் இலங்கை உடன்படாதென்றும் அவர் கூறினார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடனுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை பேரவையுடனும், வழமையான மனித உரிமை பொறிமுறையுடனும்,தொடர்ந்தும் ஒத்துழைப்பு அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார், தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படுமென தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஜெனீவாவுக்கு தெரியப்படுத்துவோமென குறிப்பிட்டார்.
இந்த தீர்மானத்திலுள்ள பல விடயங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது,மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
எனினும் இதற்கு காலம் தேவை, இன்று ஜெனீவாவில் இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

