News

இலங்கையின் ஒளடத உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா அரசாங்கம் கவனம் 

இலங்கையின் ஒளடத உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையின் ஒளடத உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (15) மாலை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் கியூபா தூதுவர் இடையிலான கலந்துரையாடலின்போது அரசாங்கத்தின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்ட தூதுவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இலங்கை மற்றும் கியூபாவுக்கிடையில் காணப்படும் 65 வருடங்களைக் கடந்த நீண்டகால இராஜதந்திர தொடர்புகளை மேலும் வலுப்படுத்தி, கியூபாவின் உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மீள ஆரம்பித்தல், இலங்கையின் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கென வைத்திய, விளையாட்டுக் கல்வி தொடர்பான புலமைப்பரிசில் வழங்கல் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கடந்த பல வருடங்களாக கியூபா முகங்கொடுத்த பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும், கியூபா தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட பிரதமர், கியூபா பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டுமென்ற உத்தியோகபூர்வ அழைப்பையும் விடுத்தார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, கியூபா அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் முதலானோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

Recent Articles

Back to top button