பிரதமர் பதவியில் மாற்றம் கொண்டுவாருமாறு அரசுக்குள்ளே போர்க்கொடி ?

தற்போது அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைப் பலமாகப் பாதுகாப்பதற்காக பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பெலவத்த அலுவலகத்திற்கு முன்மொழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவினர் ஜனதா விமுக்தி பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தெரிவான சற்றே கடும்போக்குடைய உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது. இவர்களுக்கு வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பிரதி அமைச்சர் ஒருவர் தலைமை தாங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவும் நெருக்கடி நிலைமையின் கீழ், பிரதமர் பதவிக்கு பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்னவை நியமிக்க வேண்டும் என்பதே அவர்களின் முன்மொழிவாகும்.
இந்த முன்மொழிவு குறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்காக மே மாதம் 07 ஆம் திகதி விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக அரசாங்கத்தின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு நிராகரிக்கப்பட்டால், அவர்கள் கட்சி மாறாமல் நாடாளுமன்றத்தில் சுயேட்சை உறுப்பினர்களாக இயங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
இதற்கிடையில், கடந்த காலங்களில் அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அரசாங்கத்தின் மீதான மக்கள் விருப்பம் குறைந்து வருவதால், இந்தப் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்குமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் தாம் வகிக்கும் பதவிகளைத் துறக்கத் தயாராக இருப்பதாகவும் சுமார் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே பொதுச் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.
இந்த 12 பேர் கொண்ட குழுவில் இரண்டு சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர்கள், மூன்று பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்றத்தின் உயர் பதவியொன்றை வகிக்கும் ஒருவர் மற்றும் ஏழு அல்லது எட்டு தொழில்சார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.
CN



