கருணா மற்றும் பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மற்றும் பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (3) இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் ஜனநாயக முன்னணி கட்சியான கருணா அம்மானின் கட்சியின் வேட்பாளர் கட்சி காரியாலயத்தின் முன்னாள் உள்ள வீதியில் நேற்று இரவு ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்குள்ள மதில்களில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளுக்கு மேல் பிள்ளையானின் கட்சி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
கருணாவின் வேட்பாளர் சென்று எங்கள் சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகளை ஒட்டவேண்டம் என தெரிவித்த நிலையில், இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து கருணாவின் வேட்பாளர் மீதும் அவரது ஆதரவாளர் மீதும் பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதனையடுத்து கருணாவின் கட்சி வேட்பாளர் முனிசாமி நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர் இருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்ததையடுத்து மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

